February 16, 2019
தண்டோரா குழு
பயங்கரவாத தாக்குதல் குறித்த ஆதாரங்களை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பவாட் சவுத்ரி, எந்த தாக்குதலும் நடந்தாலும் உடனேயே இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் இந்த குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. இரண்டு பக்கமும் உள்ள சில சக்திகள் இயல்பு நிலையை விரும்புவதில்லை என்றார்.
மேலும், காஷ்மீர் பிராந்தியத்தின் உள்நாட்டு போராட்டம் காரணமாக நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம்சாட்ட கூடாது. ஜெய்ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. அதில் எந்த அமைப்பு என்பது குறித்த ஆதாரங்கள் இருந்து அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் விசாரனைக்கு அளிக்க தயார் என்று அவர் தெரிவித்தார்.