February 15, 2019
தண்டோரா குழு
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இச்சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த பாதுகாப்பு படைவீரர்களின் குடும்பத்திற்கு என்னுடையை ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இருவர் வீரமரணம் அடைந்துள்ள செய்தி எனக்கு மிகவும் மனவேதனை அளித்தது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும், வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்திரவிட்டுள்ளார்.