February 16, 2019
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சம்பவம் தேசத்தையே உலுக்கும் செயலாக அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் இறந்த வீரர்களின் இறுதிச் சடங்கு அவரவர் ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடைப்பெற்று வருகின்றது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை ஏற்ப்பதாக கிரிக்கெட் வீரர் விரேந்தர சேவாக் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சேவாக்கின் டுவிட்டர் பக்கத்தில்
“வீரர்களின் உயிர் இழப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது. ஆனால் இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவை முழுவதும் என்னுடைய சேவாக் இண்டர்நேஷனல் பள்ளி ஏற்றுக் கொள்ளும். அதுவே வீரர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை.” என அவர் பதிவிட்டுள்ளார். இதே போல் ரிலையன்ஸ் பவுண்டேஷன் அமைப்பும் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை முழுமையாக ஏற்பதுடன் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. சேவாக்கின் இந்த பதிவைப் பார்த்து பலரும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.