September 28, 2019
நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளிக்கல்வி துறையின் பணி எனவும், நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
இதையடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்aகு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பள்ளிக்கல்வி துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. தொலைநோக்கு சிந்தனையுடன் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூன்றாவது ஆண்டாக தமிழக அரசு நீட் தேர்வு பயிற்சி அளித்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில் மட்டுமே நீட் பயிற்சி பெறும் நிலை உள்ளது. இந்தாண்டு நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று 49.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, 2 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும்,நீட் தேர்வுக்கு தற்போது பதினொன்றாவது ,பனிரெண்டாவது வகுப்பு புத்தகங்களைக் படித்தால் நல்லது. அதற்கு ஏற்றார் போல புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டது.நீட் தேர்விற்கு பயிற்சி அளிப்பது மட்டுமே பள்ளி கல்வி துறையின் பணி, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சுகாதார துறை அமைச்சர் அளித்த விளக்கமே போதுமானது. ஆன்லைன் மூலம் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியை போல மாணவர்களுக்கு தனியாக பேருந்து இயக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. டி.என்.பி.சி.தேர்வில் தமிழ் மொழி நீக்கம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார்.தேர்வாணயம் என்பது தேர்தல் ஆணையம் போல தனியாக ஒரு அங்கீகாரம் உள்ள ஒரு ஆணையம். அடுத்த மாதம் முதல் பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி செயல்படுவது அரசின் கவனத்திற்கு வந்திருப்பதாகவும், அச்செங்கல்சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் செங்கல் சூளைகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்று வருகின்றனர் எனவும் அவர் கூறினார். 75 அடி வரை செம்மண் எடுக்க அனுமதி வழங்கியிருப்பதாகவும், அப்பகுதிகளில் செம்மண் காலங்காலமாக எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.