November 27, 2018
தண்டோரா குழு
நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் ஆரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் அவருடைய பெயரை தேர்வு செய்து மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் அனுப்பியிருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுனில் அரோராவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையடுத்து, வரும் டிசம்பர் 2-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக அவர் பதவியேற்பார் என்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அவரே நடத்துவார் என்றும் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநில கேடர் அதிகாரியான சுனில் அரோரா 1980-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் இணைந்தார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்ராவின் முந்தைய ஆட்சியின் போது, அவரது செயலாளராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துள்ள சுனில் அரோரா, பிரச்சார் பாரதியின் ஆலோகராகவும் பணியாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு செப்டம்பரில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பேற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது ஆகும்வரை அந்தப் பதவியை அவர் வகிக்கலாம். பொதுவாக அதிக பணி மூப்பு பெற்ற தேர்தல் ஆணையரையே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிப்பது மரபாக உள்ளது. தற்போது 62 வயதான சுனில் அரோரா பணி மூப்பு அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.