March 1, 2019 தண்டோரா குழு
புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி வட்டியும், முதலுமாக தரப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அரசின் சார்பில் முடிக்கப்பட்ட நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி. இதில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் நாட்டினார். மேலும் இதையடுத்து பணகுடி-கன்னியாகுமரி சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையாயும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,
“நான் இன்று இருப்பேன், நாளை இருக்க மாட்டேன். ஆனால் இந்தியா தொடா்ந்து நிலைத்திருக்கும். ஒருபோதும் நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன். நாட்டில் ஊழல் செய்தவா்கள் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும். புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி வட்டியும், முதலுமாக தரப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவிதமாக சிலா் பயங்கரவாதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சந்தேகம் கொள்கின்றனா். ஒரு சில கட்சிகளின் கருத்துகள் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளது. நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப்படை வீரன் அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதமளிக்கிறது.
இந்தியாவிலேயே மிக வேகமாக செல்ல கூடிய ரயில் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. மக்கள் விரும்புவது நேர்மையும், பாதுகாப்பையும் தான் குடும்ப அரசியலை அல்ல. மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை மட்டுமே வாக்கு வங்கி அரசியலை அல்ல என்றார்.
மேலும், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்காக, ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் எனும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியது. அண்மையில் ராணுவத்தின் செயல்பாடுகள் அதன் வலிமையை நமக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன. மேலும் சில எதிர்க்கட்சிகளின் அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவி புரிவதாக போல் உள்ளது. உங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள். சிலர் ஊழலை வாழ்க்கை முறையாக கொண்டுள்ளனர். ஆனால் நான் ஊழலை அனுமதிக்கமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.