May 29, 2019
தண்டோரா குழு
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. அவருடன் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியலை பாஜக தலைவர் அமித் ஷா இறுதி செய்து வருகிறார். இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில் யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உடல் நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புகிறேன். எனவே அமைச்சரவையில் எந்த பதவியும் வேண்டாம். ஏற்கனவே இது குறித்து வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்து இருந்தேன். அரசுக்கும் கட்சிக்கும் வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என தெரிவித்துள்ளார்.
அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.