December 21, 2018
தண்டோரா குழு
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எழுத்தாளர் பிரபஞ்சன் (73) காலமானார்.
புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் பத்திரிகைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக்கொண்டார்.பிரபஞ்சன் 1995-ம் ஆண்டில் “வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், கடந்த ஓராண்டாக புற்றுநோயால் கடும் அவதியடைந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவே, அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சில நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மீண்டும் பாதிப்படைந்தது. இதனால் , மீண்டும் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருந்தனர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.