March 1, 2019 தண்டோரா குழு
கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், மோடியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த கருத்துக்களை கொண்டு திட்டம் தீட்டியுள்ளனர் என பாராட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அரசின் சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி. இதில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் நாட்டினார். மேலும் இதையடுத்து பணகுடி-கன்னியாகுமரி சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையாயும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம்,
” நரசிம்ம அவதாரம் எடுத்தது போல பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார். விரைவில் பெறவுள்ள இமாலய வெற்றிக்கான துவக்க விழா தான் இந்த விழா. மோடியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த கருத்துக்களை கொண்டு திட்டம் தீட்டியுள்ளனர்” என பேசியுள்ளார்.