March 27, 2019 தண்டோரா குழு
பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக ராகுல் காந்தி உலக நாடக தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதனை பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் அறிவித்தார். அப்போது மோடி நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது. இன்று வரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. இந்த சோதனையை இப்போது இந்தியா 4-வது நாடாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. சோதனையும், ஏவுகணையும் முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே என்றார்.
இதற்காக DRDO அமைப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் விஞ்ஞானிகளை பாராட்டிய ராகுல், பிரதமர் மோடியை கிண்டல் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
“வெல்டன் DRDO, உங்களது செயல்பாட்டால் அதீத பெருமையாக உள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு எனது நாடக தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.