September 15, 2018
தண்டோரா குழு
பாலியல் புகாருக்கு ஆளான ஜலந்தர் பிஷப் பிரான்கோ மீது விசாரணை நடந்து வரும் நிலையில் ராஜினாமா செய்தார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார், ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில்,பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர். அதைபோல் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து, பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடந்து வருகிறது. சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் எனக்கூறப்படுகிறது.