February 24, 2026
தண்டோரா குழு
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான நிரலாக்கப் போட்டியான CodeWar 3.0 இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
முதல் சுற்று 18.02.2026 அன்று Skills and Brains என்னும் தொழில்நுட்பத்தில் இணைந்து நடத்தப்பட்டது. இச்சுற்றில் மொத்தம் 810 அணிகள் கொண்ட 1528 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது நிரலாக்கத் திறன், தர்க்க சிந்தனை மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறனை வெளிப்படுத்தினர்.அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு சிறந்த அணிகள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,இறுதிப்போட்டி இன்று பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 501 அணிகள், மொத்தம் 1100 மாணவர்கள் கலந்து கொண்டு கடுமையான நிரலாக்க சவாலில் ஈடுபட்டனர். இப்போட்டி iamneo என்னும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து நடத்தப்பட்டது. 5 பிரச்சினை அறிக்கைகள் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தீர்வுகள் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
முழுமையான தானியங்கி மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில்,ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி அணியினர் CodeWar சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த அணியில், A.தமிழ்செல்வன், S.சால்மன் ஏஞ்சலோ, பரணிதரன், S.சந்தாரம் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். எமர்ஜெர் டெக்னாலஜிஸ் சார்பில் பரிசுத்தொகை: ₹25,000, வழங்கப்பட்டது.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணியினர் இரண்டாம் பரிசு (First Runner-Up) பெற்றனர். இந்த அணியில் G.மாதவன்,M.சுப்பிரமணியன், M.தஸ்லிமா, M.சுஜித் ராஜா ஆகியோர் இருந்தனர். ப்ரோ ஸ்கில் டெக் சார்பில் பரிசுத்தொகை: ₹15,000, வழங்கப்பட்டது.
கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அணியினர் மூன்றாம் பரிசு (Second Runner-Up) பெற்றனர். அணியில் உறுப்பினர்கள்: A.கௌசிகா, வர்ஷினி, ராதிகா, ரோகினி ஆகியோர் இருந்தனர். பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பரிசுத்தொகை: ₹10,000, வழங்கப்பட்டது.
CodeWar சாம்பியன் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக Nallas Corporation நிறுவனத்தின் HR Strategy & Operations இயக்குநர் வி.நவீன் ராஜ் கலந்து கொண்டார்.மேலும் Emergere Technologies நிறுவனர் & CEO வி.கவுரி சங்கர் மற்றும் Infosys நிறுவனத்தின் Senior Product Manager நரேந்திரன் (முன்னாள் மாணவர்) சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய பார்க் கல்வி குழுமத்தின் சி.இ.ஓ. டாக்டர் அனுஷா ரவி, தனது உரையில் எதிர்கால வேலை வாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தை விளக்கி, மாணவர்கள் தொடர்ந்து திறன் மேம்பாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
CodeWar 3.0 போட்டி மாணவர்களின் நிரலாக்கத் திறன், போட்டித் திறன் மற்றும் புதுமைத்திறனை தேசிய அளவில் வெளிப்படுத்திய சிறப்பான மேடையாக அமைந்தது.