• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் “மக்கள் நீதி மய்யம்” தனித்து போட்டி !

February 6, 2019 தண்டோரா குழு

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
எனினும், வழக்கம் போல் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது. இதற்கிடையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில்,

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும். மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம். இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன். நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம். எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம். தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.
காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம். மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.
நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம். ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது. பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க