February 19, 2019
தண்டோரா குழு
பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி தற்கொலைக்கு சமம் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மக்களைவை தேர்தலில் அதிமுக பாஜக இடையே இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக கூட்டணியில் பாஜகவில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி 21 சட்டமன்ற இடைதேர்தலிலும் பாஜக அதிமுக ஆதரிக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக – பாஜக – பாமக கூட்டணி குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். அம்மா நினைவிடம் அமைக்க எதிர்த்தவர்களுடன் கூட்டணியா? மக்கள் கூட்டம் இவர்களின் வெள்ளி, காசுக்கு அடிபணியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும். பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி தற்கொலைக்கு சமம். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வியடையும். கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கிணற்றில் இறங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.