February 18, 2019
தண்டோரா குழு
இந்திய திரைப்படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதித்து அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலை படை தாக்குதலில், இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திரைப்பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தானை சேர்ந்த ஏராளமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து இந்திய தொழிலாளர்கள் சங்கம், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள், ஒட்டுமொத்த இந்திய படங்களில் பணியாற்றவே தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரமரணம் அடைந்த தியாக வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து கொள்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும். இனி வரும் படங்களில் யாராவது அவர்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.