February 27, 2019 தண்டோரா குழு
பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்பட்டது. இதற்கிடையில், இன்று காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதல் இந்திய
பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த அபிநந்தன் இன்னமும் திரும்பவில்லை. அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. காணாமல் போன இந்திய விமானி, தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தவிவகாரம் குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபினந்தன் தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற்று நிலையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார். அவரது தந்தை, வர்த்தமானும் ராணுவத்தில் பணியாற்றியவர். பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.