September 29, 2020
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் வாழும் குழந்தைகள் பள்ளி படிப்பில் தொடங்கி கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலையில் சேரும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஈஷா அறக்கட்டளை செய்து கொடுக்கிறது.
மலைவாழ் பழங்குடியின மக்கள் பொருளாதாரம் உட்பட பல விதங்களில் சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றனர். போக்குவரத்து வசதி கூட இல்லாத தொலைதூர கிராமங்களில் வாழும் அவர்கள் கூலி வேலை செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் வாழும் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சத்குரு ஆலோசனையின் படி, ஈஷா அறக்கட்டளை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மடக்காடு, தாணிக்கண்டி, முட்டத்துயல், முள்ளாங்காடு, சீங்கப்பதி, நல்லூர்வயல்பதி உட்பட 15-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் வாழும் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் ஈஷா அறக்கட்டளை உதவிபுரிந்து வருகிறது.
பள்ளி படிப்பை பொறுத்தவரை 3 விதங்களில் அவர்கள் பயன்பெறுகின்றனர். முதலாவதாக, கோவை சந்தேகவுண்டம் பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் பழங்குடியின குழந்தைகளுக்கு முழு இலவச கல்வி வழங்கப்படுகிறது. இரண்டாவதாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஈஷாவின் சொந்த வாகனங்கள் மூலம் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டிற்கும் பத்திரமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
மூன்றாவதாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் கோவையின் நகர்புற பகுதியில் உள்ள தனியார் உண்டு, உறைவிட பள்ளியில் தங்கி படிப்பதற்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், நர்சிங், டிப்ளமோ போன்ற கல்லூரி படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு தேவையான உதவிகளையும் ஈஷா செய்து கொடுக்கிறது. கல்லூரி கட்டணம், புத்தகங்கள் வாங்கும் செலவு,போக்குவரத்து வசதி என அனைத்தையும் ஈஷா பார்த்து கொள்கிறது. அத்துடன் வார இறுதி நாட்களில் ஆங்கிலம் மற்றும் கணினி சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
இதன் விளைவாக, கடந்த 2017-20-ஆம் கல்வியாண்டில் ஈஷாவின் உதவியுடன் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த 8 மாணவிகள்,2 மாணவர்கள் உட்பட 10 பேருக்கு படிப்பு முடித்தவுடன் நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. இதன்மூலம், அவர்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை ஊதியம் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு படித்தவர்கள் கோவையிலும், சென்னையிலும் வேலை செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சத்தமின்றி நடந்து வரும் ஈஷா அறக்கட்டளையின் இந்த உதவியால் நூற்றுக்கணக்கான பழங்குடியின குழந்தைகள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர். குறிப்பாக, பெண் குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.
ஊடக தொடர்புக்கு: 90435 97080, 78068 07107