July 7, 2018 தண்டோரா குழு
பீகாரில் பள்ளி சிறுமி ஒருவரைக் கடந்த 7 மாதங்களாகப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 18 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 9வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தந்தையுடன் நேற்று காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிஷோர் ராய் என்பவரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில்,”தன்னைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தனர்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளியில் கழிவறையில் வைத்து மூன்று மாணவர்கள் இந்த மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து,அதைப் படம் எடுத்துள்ளனர்.பின்னர் இதனை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பின்னர்,அம்மாணவர்கள், வீடியோவை மற்ற நண்பர்களுக்கு காட்டியுள்ளனர்.இதனால்,அதைக் காட்டி பலர் பள்ளி வளாகத்திலே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.சில மாதங்களில் 15 சிறுவர்கள் அந்த வீடியோவைப் பயன்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர்,வேறு வழியில்லமால் அந்த சிறுமி நடந்ததை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது அவர்,போலீஸிடம் சென்றால் உனது பெயரும் பள்ளியின் பெயரும் கெட்டுவிடும் என மாணவியை போலீஸிடம் செல்ல விடாமல் தடுத்துள்ளார்.பின்னர் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்த பின்னர் அந்த மாணவியை அழைத்த தலைமை ஆசிரியர் தனது அறையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி தனது தந்தையிடம் சொல்லி தற்போது புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார் பள்ளியின் முதல்வர்,ஒரு ஆசிரியரை கைது செய்து 2 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.மொத்தம் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,மற்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.