February 15, 2019
தண்டோரா குழு
பயங்கரவாதிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்., தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி,
இது மிகவும் துயரமான சம்பவம். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம வெறுக்கத்தக்கது. நாம் அனைவரும் நமது வீரர்கள் பக்கம் நிற்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு உறுதுணையாக இருக்கும். நம் நாட்டை பிளவுப்படுத்தவே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எந்த ஒரு சக்தியும் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது. அவர்களின் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது. இது சோகமான, மரியாதை மற்றும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டிய நேரம். அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. இந்திய அரசிற்கும், நமது பாதுகாப்பு படைக்கும் நாங்கள் எங்களின் முழு ஆதரவை தருவோம். இதை தாண்டி எந்த சர்ச்சை, விவாதங்களில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டு மக்களும் மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்கும் என்றார்.