May 2, 2018 தண்டோரா குழு
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம், ஓட்டுநராக பணிபுரிந்த பரமசிவம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவரை, பின்னால் உட்காரவைத்து மாவட்ட ஆட்சியர் கார் ஓட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிபவர் அன்பழகன். இவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரித்து வருபவர் பரமசிவம்.இவர் கரூரில் பல மாவட்ட ஆட்சியருக்கு ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் நேற்று பணிக்கு வந்த அவர் ஆட்சியர் பணி முடிந்ததும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல காத்துக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து பணி முடிந்து மாலை 7 மணிக்கு மேல் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த ஆட்சியரிடம் பரமசிவம் “ஐயா நான் நாளை முதல் பணிக்கு வரமாட்டேன்” என்று கூறினார்.அதற்கு ஆட்சியர் “ஏன் என்ன பிரச்சனை” என்று கேட்டார். “நாளை முதல் நான் ஓய்வு பெறுகிறேன்” என்று பரமசிவம் ஆட்சியரிடம் கூறினார். அதற்கு ஆட்சியர் இதை ஏன் என்னிடம் முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்டார்.
பின்னர் ஆட்சியர் அனைவரையும் மீட்டிங் ஹாலுக்கு வரவழைத்து பரமசிவத்திற்கு மாலை அணிவித்து பாராட்டினர்.பின்னர் பரமசிவம் அனைவரிடமும் கூறிவிட்டு ஆட்சியரை அவர் வீட்டில் விடச்செல்ல தயாரானர். அப்பொழுது ஆட்சியர் பரமசிவனிடம் இன்று நான் உங்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். அதனை மறுத்த பரமசிவம் ஐயா உங்களை வீட்டில் விட்டு நான் செல்கிறேன் என்று ஆட்சியரிடம் கூறினார்.
அப்பொழுது ஆட்சியர் தினமும் நீங்கள் எங்களுக்காக பணி புரிந்தீர்கள் இன்று ஒரு நாள் உங்களுக்காக நான் காரை ஒட்டுகிறேன் என்று கூறினார்.பரமசிவம் வீட்டிற்கு சென்றதும் தேநீர் அருந்தி அவரது குடும்பத்தினருடன் ஆட்சியர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.