April 25, 2019
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நெருப்போடு விளையாடாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.
இதற்கிடையில்,தலைமை நீதிபதி மீதான புகாருக்கு பின்னால் மிகப்பெரிய சதி நடப்பதாக உட்சவ் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான ஆதாரங்களை சமர்பித்த அவர், ரஞ்சன் கோகோயை அவமதிக்க தன்னிடம் ரூ.1.5 வரை பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்தும்படி, சிபிஐ, உளவு அமைப்பு மற்றும் டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் கூறியது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
பணம் மற்றும் அதிகாரத்தால் ஒருபோதும் நீதிமன்றத்தை நடத்த முடியாது.நெருப்போடு விளையாட வேண்டாம்.கடந்த சில ஆண்டுகளாகவே நீதித்துறை மீது இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பான கடுமையான முடிவு எடுக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது.இந்த தாக்குதல்கள் கடந்த 4 வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் நீதித்துறையே அழிந்துவிடும். நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.