February 19, 2019 தண்டோரா குழு
இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நெல்லைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் உள்ளது. அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இந்தாண்டு நீட் தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும்.
மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை. தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம் என கூறியுள்ளார்.