January 17, 2020 தண்டோரா குழு
நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற புதிய உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற முகேஷ்சிங், வினய்சர்மா, அக்ஷய்குமார், பவன்குப்தா ஆகிய 4 பேருக்கும் 22-ந்தேதிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.இதற்கிடையே மரண தண்டனையை தள்ளி போடும் வகையில் முகேஷ் சிங், வினய்சர்மா ஆகியோர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். அது ஏற்கனவே தள்ளுபடியாகி விட்டது. இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ்சிங் ஜனாதிபதியிமும், டெல்லி கவர்னரிடமும் கருணை மனுதாக்கல் செய்தார். அந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் கருணை மனு ஜனாதிபதியிடம் இருப்பதால் தனது மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்திவைக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முகேஷ்சிங் மனுதாக்கல் செய்துள்ளார். இதுசம்பந்தமாக நீதிமன்றம் டெல்லி திகார் ஜெயில் நிர்வாகத்திடமும், டெல்லி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்டுள்ளது. விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி திகார் ஜெயிலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி கருணை மனு நிராகரித்தற்கு பின்பு 14 நாட்கள் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என விதிகள் இருக்கிறது. இதை டெல்லி அரசு ஏற்கனவே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் காரணமாக 22-ந்தேதி 4 பேரும் தூக்கில் போடப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான வாரண்ட் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.