February 26, 2019
தண்டோரா குழு
4 பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது மதுவுக்கு எதிராக போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல என பா.ம.க வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடிகரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவருமான ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த வாரம் வரை முதலமைச்சருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுக்குழுவில் அறிவித்தார்கள். மதுவுக்கு எதிராகப் போராடிவிட்டு மதுக்கடை நடத்துவோர் உடன் கூட்டணி வைப்பது ஏற்புடையதல்ல. அரசியல் நாடகம் நடத்தும் போலிகளை கண்டறிய வேண்டும்.யாரை எதிர்த்து போராடினோமோ அவர்களுடன் ஒன்று சேர்ந்து விருந்து சாப்பிடுவது வேதனையளிக்கிறது.இளைஞர்கள், பொதுமக்களை நொடிப்பொழுதில் பாமக ஏமாற்றிவிட்டது. நான்கு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என்று சொல்கின்றனர். இது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை. ஒரு நொடி பொழுதில் மக்களை ஏமாற்றலாமா. இது என்ன நாடகம் என்றால். உள்ளாட்சி தேர்தல் வரை ஒற்றுமையாக இருப்பார்கள். பின்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி கூட்டணியில் இருந்து விலகி கொள்வார்கள். இப்படி முட்டாள் தனமான கோரிக்கைகளை சொல்லலாமா. நான் இந்த கட்சியில் இருந்தபோது ஏதாவது தவறாக நடந்து இருந்தாலோ அல்லது தவறாக பேசி இருந்தாலோ உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் இந்த கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.