December 17, 2018
தண்டோரா குழு
நாமக்கல் மாவட்டம் அருகே குடித்து விட்டு ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபடுவதாக ஒரு குடும்பத்திற்கு எதிராக ஒரு கிராமமே காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மலைவேப்பன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருடைய இரு மகன்களான செந்தில் மற்றும் சங்கர் ஆகியோர் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு தினமும் குடித்து விட்டு ஊர்க்காரர்களுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஊர் மக்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இந்நிலையில், கிராம மக்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற இவர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.