May 7, 2018 தண்டோரா குழு
நாட்டை உலுக்கிய 8 வயது சிறுமி பலாத்காரம் மற்றும் கொலைவழக்கை பஞ்சாப் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதுநாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று காஷ்மீர் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீரிலேயே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாகவும் உறுதி அளித்தது.இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் , கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், வழக்கு தினசரி நடைபெற வேண்டும் என்றும் வழக்கின் விசாரணையை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதைபோல்,பதான்கோட் நீதிமன்றத்திற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு வழக்கறிஞரை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கும், வழக்கறிஞருக்கும், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.