March 2, 2019 தண்டோரா குழு
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில்,இந்திய ஜனநாயகக் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர்,
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற அவசர பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் இருக்கும் சூழலில், பெரும் மாற்றம் தேவை அது ஸ்டாலின் மூலம் தான் ஏற்படும். பாஜக கூட்டணியில் தொடர்ந்து தொல்லை அளித்து வந்த பாமகவும், இருப்பதால் அக்கூட்டணியில் நீடிக்கவில்லை என பாரிவேந்தர் குறிப்பிட்டார். மேலும், கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.