February 21, 2019
நாடாளுமன்ற தேர்தலில் தனியே நிற்போம் என்று கூறியது நான் அல்ல நாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கொஞ்சம் கொஞ்சமாக கூடிய கூட்டம் இன்று தமிழகமெங்கும் இந்த குடும்பம் பரவியிருக்கிறது. இங்கே இதே இடத்தில் நின்று கொண்டு கட்சியின் கமிட்டி நபர்களின் பெயர்களை அறிவிக்கும் அளவிற்கு இன்று இன்னும் வளர்ந்திருக்கிறது.
இங்கே கொடியேற்றி இருக்கிறோம் பல இடங்களில் தமிழகத்தில் கொடியேறி கொண்டிருக்கிறது. இலக்கு உங்களுக்கு தெரியும். அதை நோக்கி நகர்வோம். குளத்தடி மீன் போல மேலே மழை பொழிகிறது நமக்கென்ன என்று இருந்த மக்கள் இன்று வெளியே வந்து இருக்கிறார்கள். காரணம் அரசியல் உதவாக்கரைகள் கூட்டம் குறைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது
மக்கள் பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு இருக்கின்றது. எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையைப் பிடித்து புத்துயிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். தமிழகமெங்கும் தனியே நிற்கிறோம் என்று சொன்னது நான் அல்ல. நிற்போம் என்றால் நாம், நாம் என்பது எப்படி தனிமையாக இருக்க முடியும். நாம் என்றாலே ஒன்று படுவோம் என்று தானே அர்த்தம்.
நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. உங்கள் கட்சியின் அமைப்பு தயாரா என்னை இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பலம் என்ன என்பதை நிரூபிக்க இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. இந்தக் கருவியை பயன்படுத்தி கொள்ளுங்கள் தமிழகம் வளம் பெறட்டும் நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.