September 5, 2018
தண்டோரா குழு
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த பருவ மழைக்கு அந்த மாநிலமே நிலைகுலைந்தது. தற்போது கேரளாவில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
கேரளாவைப் போலவே நாகாலாந்திலும் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. பெய்து வரும் கனமழையால் மாநிலமே ஸ்தம்பித்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரையிலும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தால் ரூ.800 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கணித்துள்ளது.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் நெய்பு ரியோ நாகாலாந்து மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மழையால் தத்தளித்து வரும் நாகாலாந்து மக்களுக்கு உதவுங்கள் என மக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகாலாந்து மக்களுக்காகமுதல்வர் நெய்பு ரியோவை நேரில் சந்தித்து1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங்கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தங்கள் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும், மாநிலத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காகவும் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.