June 15, 2018 தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா.
இவர் கடந்த 2010-11ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார்.ஆனால் அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் கண்டறிந்ததையடுத்து,த்ரிஷா போலி கணக்கு காண்பித்து வருமான வரித்துறையினை ஏய்த்ததாக கூறி ரூ.1.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து,நடிகை த்ரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அப்போது த்ரிஷாவிற்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.
எனினும்,இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,நடிகை த்ரிஷா ரூ.3.52 கோடிக்கு கணக்கு காண்பித்துள்ளார் என்று கூறி,அவரது அபராதத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.