February 9, 2019 தண்டோரா குழு
நடிகர் கருணாகரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர், துணை தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி வெளியான திரைப்படம் பொதுநலன் கருதி.ஸியோன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் 3 கதாநாயகர்களில் ஒருவராக கருணாகரன் நடித்து இருக்கிறார். இந்நிலையில், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக, திரைப்பட இயக்குனர் சியோன், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில்,
கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்த போது கருணாகரன் வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து விஜய் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாகரன் மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கருணாகரனிடம் இருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.