June 5, 2018 தண்டோரா குழு
நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையார்களை அவதூறாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த விவகாரத்தில், 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கைது நடவடிக்கைக்கு அஞ்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதைபோல் உச்சநீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாத போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது செய்தியாளர் முரளிகிருஷ்ணா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.