March 7, 2019 தண்டோரா குழு
தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த கோரிய வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும், வரும் 10ஆம் தேதி கூட சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அப்போது, மனுதாரர் , போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு முகாமோ விளம்பரங்களோ செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிபதிகள், நடிகர்கள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்றும், அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் போது அது எளிதாக மக்களை சென்றடையும் என்றும் கூறினர். இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.