February 21, 2019
தண்டோரா குழு
பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று முன்தினம் அதிமுக – பாஜக- பாமக இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் நேற்று திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.
இதற்கிடையில் , தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது. அண்மையில் தமிழகம் வந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அவர் விஜயகாந்தை நலம் விசாரிப்பதற்காகவே வந்ததாக அவர் கூறினார். எனினும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று சந்தித்தார். நலம் விசாரிப்பதற்கு தான் விஜயகாந்தை சந்தித்ததாக அவர் கூறினார். ஆனால், விஜயகாந்த் – திருநாவுக்கரசர் இடையேயான சந்திப்பு அரசியல் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.