April 9, 2019
தேசியவாதியாக இருப்பது குற்றமா? என கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
கோவை பா.ஜ.க.,வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகேந்திரன் (பொள்ளாச்சி), ஆனந்தன் (திருப்பூர்), தியாகராஜன் (நீலகிரி), ஆகியோரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்பொதுக்கூட்டம் நடைபெற்றது.பிரதமர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
மருதமலை முருகனுக்கு அரோகரா… வணக்கம் சகோதர, சகோதரிகளே என உரையை தொடங்கினார்.
பின்னர் பேசிய அவர்,
கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எம்ஜிஆர், ஜெ.வின் எண்ணஙகள் நம்மை வழிநடத்தும் என நினைக்கிறேன்.பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.தேசிய பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை.நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக இருக்கிறோம்.1998-ல் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது திமுகவும், காங்கிரசும் மோசமாக செயல்பட்டன. எதிரி நாடு மீது எதிர்க்கட்சிகள் மென்மையாக நடந்து கொள்கிறது. நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும்.துல்லிய தாக்குதல் நடந்ததா?விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது.
பிரதமர் மோடி ஏன் தேசியத்தை பற்றி பேசுகிறார் என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். தேசிய தன்மை தான் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, மருத்துவ காப்பீடு திட்டத்தை கொடுக்க வைத்தது.தேசியவாதியாக இருப்பது குற்றமா? இந்த தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேச துரோகிகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. நடுத்தர மக்களுக்கு தேவையான திட்டங்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாஜக கூட்டணி உழைத்து வருகிறது.10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது, ஆனால் 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது. மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றவே எதிர்கட்சிகள் முயற்சிக்கிறது.
நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும்.
நதிகளை தூய்மைப்படுத்தவும், இணைக்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம்.மழைநீர் சேகரிப்புக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்.21ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது.பிரித்தாளுகின்ற, குடும்ப அரசியல் செய்வோருக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்.வலிமையான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.நாற்பதும் நமதே நாடும் நமதே என தமிழில் பேசி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பரப்புரை உரையை நிறைவு செய்தார்.