January 18, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.2.5 கோடி தார்சாலை திட்டப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டங்களுக்கான பூமி பூஜை மற்றும் முடிந்த பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு இதனை துவக்கி வைத்தார்.89வது வார்டு காசிநாத் கார்டன் பகுதியில் ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் செலவில் விளையாட்டு வளாகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. தியாகராஜா நகரில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கட்டிடத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். 91வது வார்டு கல்கி கார்டனில் மாநகராட்சி சார்பில் ரூ.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட உள்விளையாட்டு அரங்கமும் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு இடங்களில் தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. 90வது வார்டு ஹவுசிங் யூனிட், சாந்தி ஆசிரமம் சாலை, ஹவுசிங் யூனிட் ஆர்பிளாக், லட்சுமி நகர், மீனாட்சி நகர், 89வது வார்டு மருதம் நகர், சமீம்கார்டன், மருத்துவமனை சாலை, அண்ணாநகர், 91வது வார்டு ஓம் சக்திநகர், காமாட்சி நகர், ஜே.ஆர்.டி. கார்டன், விஷால் எஸ்டேட், கோகுலம் காலனி, குளத்துப்பாளையம் மெயின்ரோடு, வசந்தம் நகர், கல்கி கார்டன் உள்ளிட்டபகுதிகளில் மொத்தம் ரூ.2 கோடியே 54 லட்சம்செலவில் தார்சாலைகள் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், துணை கமிஷனர் மதுராந்தகி, பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி உள்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.