April 10, 2019
தண்டோரா குழு
மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை போன்ற தூத்துக்குடி தொகுதிக்கென தனியாக தேர்தல் அறிக்கை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டனியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர்.தமிழிசை தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தூத்துக்குடி தொகுதிக்கென தனியாக தேர்தல் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த தேர்தல் அறிக்கையில்
•தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை
•விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை
•பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிச்சந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
•மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்
•தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை
•தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை
•திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்க நடவடிக்கை
•தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.