May 23, 2018 தண்டோரா குழு
தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையடுத்து,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர்.போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.இதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் வேம்பார்,குளத்தூர்,ஆறுமுகமங்களம்,வேடநத்தம், ஒட்டப்பிடாரம்,எப்போதும் வென்றான் ஊர்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடத்த,மிதிவண்டி,இருசக்கர வாகனம்,நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.