December 24, 2018
தண்டோரா குழு
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா. இவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் தம்பியாவார். இவர், கழகத்தின் கொள்கை-குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பில் கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தனது செயலுக்கு நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்ததால் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.