February 15, 2019
தண்டோரா குழு
தீவிரவாத தாக்குதலுக்கு மிகப்பெரிய விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் விழாவில் பேசிய மோடி,
ஜம்மு – காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்தார். உலகநாடுகள் ஒன்றிணைந்தால் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் என்றும் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் உறுதித்தன்மையை சீர்குலைக்காது என்றும் மோடி கூறியுள்ளார்.
மேலும், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாத தாக்குதலுக்கு மிகப்பெரிய விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி இருக்கும்.பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. தீவிரவாதத்துக்கு உதவுவோரை ஒருபோதும் இந்தியா மன்னிக்காது.
எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமையை மறந்து பயங்கரவாதிகளை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.