February 18, 2019
தண்டோரா குழு
1999ஆம் ஆண்டு காந்தஹார் சம்பவத்தில் தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? யார் அதற்குக் காரணம்? என்று நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து புல்வாமா தாக்குதல் குறித்து நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில் ” புல்வாமாவில நமது ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது, அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆனால், குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நாம் பழிசுமத்தலாமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி சமுக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியது.
இது தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“நான் என்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தீவிரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. புல்வாமா தாக்குதலுக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் 1999 ஆண்டு காந்தஹார் சம்பவத்தில் தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? யார் அதற்குக் காரணம்? அவர்களுக்கு எதிராகத்தான் எங்களின் போராட்டம் இருக்கிறது. எதற்காக ஒரு வீரர் சாகவேண்டும்? ஏன் காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.