November 5, 2018
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. நேரத்தை மற்றக்கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கவேண்டும். அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. அதன்படி அரசின் உத்தரவை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188இன் கீழ், 1 முதல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதைப்போல் அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும், தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.