May 15, 2020
தண்டோரா குழு
திருப்பூரில் புகைபடங்களுடன் தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு வரவேற்பு பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பூர் பனியன் தொழில் முற்றிலும் முடங்கியது.பல லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலை வாய்ப்பை இழந்தனர் இந்நிலையில் தமிழக அரசு 50 சதவீத தொழிலாளர்களுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பனியன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்தது.இதனை தொடர்ந்து பனியன் நிறுவனங்கள் இயங்க துவங்கியுள்ளது. ஆனாலும் வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்த தினத்திற்கு முன் தினம் இரவோடு இரவாக அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டர். பனியன் நிறுவனங்கள் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியான பின்பு வெளி மாவட்டத்திலிருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு வரமுடியாத நிலையில் 30 சதவீத பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.இதனால் சிறுகுறு பனியன் கம்பெனிகளில் குறைந்த அளவில் தொழிலாளர்களை வைத்து முகக்கவசம் தயாரிக்கும் பணி அதிக அளவில் நடந்து வருகிறது.
கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முக கவசங்கள் அணிய வேண்டும் என உலகமே எச்சரித்து மக்களுக்கு கவசத்தின் அவசியத்தை உணர்த்தி கொண்டிருக்கிறது. முக கவசங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் 24 மணி நேரமும் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெடிக்கல் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த முக கவசங்கள் தற்போது பெட்டிக்கடை முதல் அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் திருப்பூரில் தற்போது பனியன் கம்பெனிகள் ரஜினி, விஜய், உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் முகம் பதிக்கப்பட்ட வித்தியாசமான முகக்கவசம் உள்பட விதவிதமான பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்தயாரிப்பில் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றி வருகின்றனர்.திருப்பூர் பனியனர் நிறுவனங்களின் வித்தியாசமான தயாரிப்பை விரும்பும் பலர் லட்சக்கணக்கில் முகக்கவசங்களை தயாரித்து தர ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து பனியன் கம்பெனியின் நிர்வாகியான சந்திரசேகர் கூறுகையில்,
முகக்கவசத்தில் பல்வேறு உருவங்கள் பதிக்கப்பட்டு தயாரித்து வருகிறோம். இந்த முகக்கவசங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இது தவிர கொரோனா தடுப்பு பணியாளர்களர்களுக்கான கவச உடையும் தயாரித்து வருகிறோம்.இதனை வெளிமாவட்டம், மாநிலம் வெளிநாடுகளுக்கும் தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளளோம். இதற்கான அனுமதியை அரசு வழங்கவேண்டும். ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் கொரானா முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியே குறைந்தது 6 மாதகாலம் வரை தங்கு தடையின்றி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வாய்ப்பாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கொண்டாடுகிறார்கள் வியாபாரிகள்.ஆனால் இது ஆபத்தானது. இதனால் சுவாசத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதுமட்டுமில்லாமல் சாலையில் எதிரெதிராக செல்பவர்களின் கவனம் சிதறும், விபத்துகள் நேரிடும்.எனவே இந்த முக கவசங்களை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.