February 20, 2019
தண்டோரா குழு
திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று அதிமுக- பாஜக- பாமக கூட்டணி உறுதியானது. இக்கூட்டணி குறித்து எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த கூட்டணி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து கூறுகையில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கிடையில், டெல்லியில் ஆவின் பால் விற்பனையகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
திமுக கூட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மற்ற கட்சிகளை அழைக்கிறது. ஆனால் அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்வது ஏன். இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள். நாங்கள் மட்டும் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமா? அரசியல் சூழலை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றன. தமிழக வளர்ச்சிக்கு 8 வழிச்சாலை திட்டம் அவசியம் தேவை. திருநாவுக்கரசருக்கு வயது 70 ஆகியும் திருமணம் பற்றியே இன்னமும் யோசிக்கிறார். எப்போதும் அதிமுக, திமுக மட்டுமே களத்தில் இருக்கும். இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு மற்ற கட்சிகள் காணாமல் போய்விடும். டிடிவி தினகரன் வேறு கட்சி ஆரம்பித்துவிட்டார். அவர் எப்படி அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியும் என்றார்.