February 20, 2019
தண்டோரா குழு
2019 மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று அதிமுக – பாஜக- பாமக கூட்டணி உறுதியானது. இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, திமுக எம்பி கனிமொழி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர், இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் தலைவர்கள் அண்ணா அறிவாலயம் சென்றனர். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
இதையடுத்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பிற கட்சிகளுடன் கலந்து பேசியபின் முடிவு செய்யப்படும். ஓட்டலில் ரகசியமாக சந்தித்து பேசாமல் கட்சி அலுவலகத்தில் எங்கள் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. தேமுதிவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும். அதிமுக கூட்டணி மக்கள் நலக்கூட்டணி கிடையாது. அது பண நல கூட்டணி எனக் கூறியுள்ளார்.