June 4, 2018 தண்டோரா குழு
தாய்லாந்தில் உயிரிழந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சுமார் 8 கிலோ பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகம் முழுவதும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர்.இந்நிலையில்,தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சோங்லா மாகாணத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திமிங்கலம் ஒன்று கடற்கரை ஓரம் ஒதுங்கியது.இதனைப்பார்த்த பொதுமக்கள் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
கடற்படை அதிகாரிகள் வந்து அந்த திமிங்கலத்தை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.ஆனால் அந்த திமிங்கலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.இதைத்தொடர்ந்து திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது.அப்போது அதன் வயிற்றில் இருந்து 8 கிலோ அளவில் 80 பாலீதின் பைகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பாலிதீன் பைகளை உண்டதால் தான் இந்த திமிங்கலம் பரிதாபமாக இறந்தது என்பதை கண்டுபிடித்தனர்.இதனால்,சூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.