August 19, 2020
தண்டோரா குழு
கோவை ஆர்எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். ஐடிஐ ஆசிரியரான, இவரது 19 மகள் சுபஸ்ரீ கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமியில் பயின்று வந்தார். கட்ஆப் 451 மதிப்பெண்கள் எடுத்த அவர், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்றவர், கடந்த ஆண்டு சீட் கிடைத்தபோதும், மருத்துவம் படிப்பதற்காக இந்த ஆண்டு நீட் எழுத தயாராகிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நீட் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. இதனால் தேவி ஸ்ரீ மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலைக்கும் முடிவு செய்த அவர் நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே,இந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மற்றும் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன் ஆகியோர்,மாணவியின் இல்லம் மற்றும் மருத்துவமனைக்கு சென்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக நா.கார்த்திக் எம்எல்ஏ கூறுகையில்
மாணவியின் தற்கொலை தொடர்பாக கேள்விபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வர கூறியதாக தெரிவித்தவர், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாகவும், இதை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என கூறினார்.
சிஆர்..இராமச்சந்திரன் கூறுகையில்;-
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறியவர், கண்ணீர் மல்க அவரது தந்தை கூறியதாகவும், மாணவர்களின் இந்த நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மக்களை பற்றி கவலைப்படாத இந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று கூறினார்.