December 20, 2018
தண்டோரா குழு
தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிர்த்தரப்பினர் போட்ட பூட்டை விஷால் உடைக்கச் சென்றதால் போலீசார் அவரை கைது செய்தனர்.
சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் என்பவர் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர்.
இதையடுத்து, சங்க அலுவலகத்திற்கு நடிகர் விஷால் சென்றார்.அப்போது போலீசார் அவரை தடுத்தனர். இதற்கிடையில், அந்த பூட்டை உடைக்க முற்பட்டபோது போலீசார் தடுத்ததால் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அப்போது பேசிய விஷால் ,
எங்கள் அலுவலகத்துக்குள் செல்வதற்கு எங்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். கேள்வி கேட்டதற்கு உரிய பதில் சொல்லாமல் கைது செய்துகின்றனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.ஆனால் திட்டமிட்டப்படி இளையராஜாவின் நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம் திரட்டப்படும் நிதியில் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வழங்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்