December 20, 2018
தண்டோரா குழு
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் என்பவர் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர்.
இதற்கிடையில், இன்று காலை சங்க அலுவலகத்திற்கு நடிகர் விஷால் சென்றார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். அப்போது விஷால் அந்த பூட்டை உடைக்க முற்பட்டபோது போலீசார் தடுத்தனர். இதனால் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய சொத்து விவகாரத்தில் அமைதியை குலைக்க முயற்சித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இன்று காலை கைது செய்யப்பட்ட விஷால் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.