December 19, 2018
தண்டோரா குழு
நடிகர் விஷால் பதவி விலக கோரி தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சக தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் இரண்டு பதவிகளை வகித்து வருகிறார். எனினும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் வந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனறு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான பாரதிராஜா, டி ராஜேந்தர், ராதாரவி, ரித்தீஷ் உள்ளிட்டோர் விஷாலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்
இந்நிலையில், சென்னை தி. நகரிலுள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் தயாரிப்பாளர்கள் சங்கம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து விஷால் தரப்பை சேர்ந்த கதிரேசன் என்பவர் சமரசம் செய்ய முயற்சித்தார். இதில் சமாதானமடையாத தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், கதிரேசன் விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக்கூறி தயாரிப்பாளர் சங்க கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறுகையில்,
விஷால் பொறுப்பேற்றதில் இருந்து எந்தவிதமான வாக்குறுதிகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை.பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நடிகர் சங்கத்தில் செயலாளராக உள்ள விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவரானது தவறு” கடந்த நிர்வாகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 கோடி வைப்புநிதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும்,முதல்வரை சந்தித்து முறையிடப் போவதாகவும், தமிழ் ராக்கர்ஸ்-ஐ பிடிப்பதாகக் கூறிய விஷால் அதில் ஒரு பார்ட்னராக இருக்கிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.